உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையாற்றிய போலீஸ் அதிகாரியை, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவி கேள்விகளால் திணறடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் அளித்த பெண்ணும், அவரது வழக்கறிஞரும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணின் உறவினர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்தனர். இது அந்த பெண்ணை கொல்வதற்காக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட சதி என பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் எதிரொலித்து வருகிறது.
இதனிடையே, போலீஸ் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பரபங்கி நகரில் உள்ள பள்ளிகளில் காவல்துறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, பள்ளி ஒன்றில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.எஸ்.கவுதம் என்பவர் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அப்போது, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உன்னாவ் சம்பவத்தை குறித்து கேள்வி எழுப்பினார். சுமார் ஒரு நிமிடம் நீடித்த அந்த கேள்வி வீடியோவில் பதிவானது.
அந்த மாணவி, ‘எங்களது குரலை உயர்த்த வேண்டும், போராட வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். டீன்-ஏஜ் பெண் ஒருவர் பாஜக தலைவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்’ என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். மேலும், “எல்லோருக்கும் தெரியும் அது விபத்து இல்லை என்று. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் நெம்பர் பிளேட் மறைக்கப்பட்டிருந்தது.
இதிலிருந்தே இந்த சம்பவத்தில் யாரோ ஒரு சாதாரண நபர் ஈடுபட்டிருந்தால் நாங்கள் போராடலாம். ஆனால், அதிகாரமிக்க நபர் பின்னால் இருந்தால் என்ன செய்வது?. நாங்கள் போராடினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என எங்களுக்கு தெரியும். அப்படி நடவடிக்கை எடுத்தாலும் எந்த பயனும் இருக்காது. அந்தப் பெண் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளார். நாங்கள் போராடினால் எப்படி நீதியை உறுதி செய்வீர்கள்?. எனது பாதுகாப்பை எப்படி உறுதி செய்வீர்கள்?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார் அந்த மாணவி. அந்த மாணவி கேள்வி எழுப்பும் போது சக மாணவிகள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.