இந்தியா

கொரோனாவில் இருந்து மீண்டார் யோகி ஆதித்யநாத்

jagadeesh

கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கொரோனா அலையில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இணையவழியில் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். மேலும் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.