யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் file image
இந்தியா

“கோயில்களை விட உயரமான கட்டடங்களை கட்ட அனுமதி இல்லை” உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

Angeshwar G

புனித நகரங்களாக கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற நகரங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த நகரங்களின் புராதன தன்மையையும், புனிதத்தையும் பழமையையும் காக்க அங்குள்ள கோயில்களின் உயரத்திற்கு மேல் கட்டடங்களைக் கட்ட அனுமதிக்கக்கூடாது என உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் உத்தரவிட்டுள்ளார்.

திங்கட்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான மாஸ்டர் ப்ளான் - 2031 திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இதனையடுத்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், “கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா பிருந்தாவன் போன்ற மத நகரங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளுக்கு பெயர்பெற்ற கோயில்களின் பழமையான மற்றும் வரலாற்று சாரத்தை பராமரிக்க, கோயில்களைச் சுற்றிலும் அதன் உயரத்திற்கு மேலான கட்டடங்களை அனுமதிக்கக்கூடாது. இந்த ஒழுங்குமுறை மாஸ்டர் பிளானில் இணைக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்

செய்தியில் மேலும் தெரித்திருந்ததாவது, “நகரில் எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எரிபொருள் பேருந்துகளை முடிந்த அளவு நகரத்திற்கு வெளியே உபயோகிக்க வேண்டும். மல்டிலெவல் பார்க்கிங்கிற்கு பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்தின் ப்ளானிலும் 15-16 சதவீதத்தை பசுமையான இடமாக ஒதுக்குவது அவசியம். உத்தரப்பிரதேசம் இப்போது தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்துகிறது. மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.