நீர் வற்றியதன் காரணமாக பயன்படுத்தப்படாத நீர்நிலைகள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 21 ஆயிரம் நீர்நிலைகள் பயன்படுத்தப்படாத நீர்நிலைகளாக உள்ளன என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் வறண்டு கிடக்கும் நீர் நிலைகள் குறித்த கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி உள்ளதா? எனவும், வறண்டு கிடக்கும் நீர் நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி அளவு குறித்தும் மாநிலங்களவையில் உறுப்பினர் சுஷ்மிதா தேவ் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, “மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100% மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் நீர்ப்பாசன கணக்கெடுப்பை நடத்தியது. வறண்டு போன நீர் நிலைகளை மீட்டெடுக்க பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டத்தின் மூலம் 135.97 கோடி ரூபாயை 2023-2024ம் ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93,009 நீர் நிலைகள் வற்றியதன் காரணமாக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 21,449 நீர் நிலைகள் வற்றியதன் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது” என மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.