இந்தியா

உன்னாவ் பெண்ணுக்கு நீதி வேண்டி கொந்தளிக்கும் சமூக வலைதளங்கள்!

webteam

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். 

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சிவம் மற்றும் சுபம் திரிவேதி என்ற இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்து சிவம் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

மற்றொரு குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளிவந்த சிவம் தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப்பெண்ணை கடுமையாகத் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். தீ வைப்பு தொடர்பாக அந்தப்பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சைபலனின்றி அப்பெண் நேற்று உயிரிழந்தார்.

சமீபத்தில் தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அது அடங்குவதற்குள் மற்றொரு பெண் கொடூரர்களின் தீக்கு உயிரிழந்து இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். 

ட்விட்டரில் #unnaokibeti, #UnnaoTruth உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்த ஹேஸ்டேக்குகள் மூலம் உன்னாவ் பெண்ணுக்கு நீதி வேண்டியும், பெண் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.