இந்தியா

இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர் - குஜராத் காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றார்

Veeramani

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அகமதாபாத் நகருக்கு சென்ற போரிஸ் ஜான்சனுக்கு, விமான நிலையத்தில் இருந்து, அவர் தங்கவுள்ள ஹோட்டல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அகமதாபாத் நகர் சென்ற போரிஸ் ஜான்சன் முதலில் காந்தி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு அவர் ராட்டையில் நூல் நூற்று, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

அதன்பின், குஜராத்தின் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஜான்சன் பார்வையிடுகிறார். பின்னர் காந்திநகர் சென்று அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வதோதரா நகர் அருகே ஹலோல் என்ற இடத்தில் உள்ள பொக்லைன் இயந்திரம் தயாரிக்கும் ஆலைக்கும் அவர் செல்கிறார். குஜராத்தின் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இறுதியாக டெல்லி சென்று நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சந்திப்பின் போது, உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:இலங்கையில் முதன்முறையாக போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி