இந்தியா

20% தொகையை மிச்சப்படுத்துங்கள்: மத்திய அமைச்சகங்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

Veeramani

மத்திய அமைச்சகங்கள் தங்கள் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 20 சதவிகிதத்தை மீதப்படுத்துமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று தொடங்கும் நிதியாண்டின் 2ஆவது காலாண்டுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தும் என மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் சுகாதாரம், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைத் துறைகளுக்கு மட்டும் இந்த சிக்கன நடவடிக்கையில் இருந்து விலக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஓய்வூதியம், வட்டி, மாநிலங்களுக்கான நிதியை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த அறிவுறுத்தலின் கீழ் வராது என்றும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா தடுப்புச் செலவுகள், இலவச தடுப்பூசி, பொது முடக்கங்களால் வரி வருவாய் குறைவு என மத்திய அரசு கடந்த ஓராண்டுக்கு மேலாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் சிக்கன நடவடிக்கையை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் கடன் கடந்த மார்ச் நிலவரப்படி 116 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.