இந்தியா

மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்

மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்

webteam

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குழு அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பிறகு, உடல் நிலை சீரானதை தொடர்ந்து இந்தியா திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல்நிலை மோசமானதாகக் கூறப்பட்டது.

இது பற்றி அறிந்ததும் நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பெங்களூருவுக்கு வந்து அவரின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார். பாஜகவின் தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனந்தகுமாரின் உடல் பெங்களூரு தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.