இந்தியா

நிர்பயா நிதியில்‌‌ 20% மட்டுமே செலவு !

webteam

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய நிர்பயா நிதியில், இதுவரை 20 சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிர்பயா என்பதற்கு பயமற்றவள் என்று பொருளாகும். 

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக 2015-19ஆம் ஆண்டிற்கு மத்திய அரசு சார்பில் ஆயிரத்து 813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் 854.66 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதில் பெண்கள் பாதுகாப்பு பணிகளுக்காக வெறும் 165.48 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாநிலத்திலும் நிதி செலவிடப்படவில்லை என்றும், 18 மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. டெல்லி மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், மற்ற எவ்வித திட்டத்திற்கும் நிர்பயா நிதியை செலவிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில கட்டுப்பாட்டு அறைகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள இந்த நிர்பயா நிதி தமிழகத்தில் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.