இந்தியா

”தமிழகத்தில் இந்த நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது” - மத்திய அரசின் தகவல் சொல்வதென்ன?

webteam

இந்தியாவில் 131 நகரங்களும், இதில் தமிழகத்தில் நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவில் மாசடைந்த நகரங்கள் பட்டியல் தொடர்பாகவும், மாசடைவதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் நெறிமுறைகளை வகுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதிலில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர் யாதவ், நாடு முழுவதும் மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதில் 123 நகரங்கள் மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லை வரம்பை தாண்டி காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 131 நகரங்களிலும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 23 மாநிலங்களை சேர்ந்த 131 நகரங்களில் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.