இந்தியா

‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

rajakannan

வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை. கடந்த ஓராண்டுக்குள், முத்தலாக் தடை மசோதாவை பலமுறை அவசரச்சட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படும். மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் மாநிலங்களவைக்கு செல்லும். மக்களவையில் பலம் இருந்ததால் கடந்த ஆட்சி அங்கு மட்டும் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் பலம் இல்லாததால் தொடர்ச்சியாக இந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை.