இந்தியா

மகாராஷ்டிர முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

jagadeesh

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, 33 நாட்களுக்குப் பிறகு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு, திடீரென பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த அஜித் ‌பவார் பதவியேற்க வந்தபோது, சரத் பவாரின் மகளும், அஜித் பவாரின் சகோதரியுமான சுப்ரியா சுலே அரவணைத்து வரவேற்றார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அஜித் பவார் பங்கேற்றார். தாம் இப்போதும் தேசியவாத காங்சிரசில்தான் இருப்பதாகவும், புதிய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து உத்தவ் தாக்கரேதான் முடிவு செய்ய வேண்டும் என அஜித் பாவர் கூறியுள்ளார்.

இதனிடையே, மகாராஷ்டிராவில் அவசரகதியில் பதவியேற்ற பாஜக ஆட்சி நான்கே நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அமைச்சரவையில் கூட்டணிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு என பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூ‌ழலில், முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ‌இன்று பதவியேற்கிறார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி நினைவிடத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உத்தவ் தாக்கரே ‌தனது மனைவி ராஷ்மியுடன் சென்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று சந்தித்தார். உத்த தாக்கவே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதையடுத்து, மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.