பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை முகநூல்
இந்தியா

பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள்!

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, எல்லையில் ஊடுறவ முயன்ற பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மீது நேற்றைய தினம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்கு பேர் போன இந்த இடத்தில் நடந்த தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி துவங்கி உலகத் தலைவர்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் நடந்த அடுத்த நாளான புதன்கிழமை காலை (23.4.2025) பாரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளதூ.

இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லாவில் நடந்து வரும் அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது” எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள், சேமிப்பு கிடங்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.