இந்தியா

புல்வாமாவில் என்கவுண்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

jagadeesh

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இம்மாதத்தில் மட்டும் பலமுறை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அவ்வகையில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் நடைபெற்றது.

இறுதியாக இந்த துப்பாக்கிசூட்டில் 2 தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்த நபர் என மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 50 தீவிரவாதிகளும் 17 பாதுகாப்பு படையினரும் பல்வேறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.