இந்தியா

வெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை?

வெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை?

webteam

மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் வெங்காய விலை குறைந்ததால் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில்தான் அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. குறிப்பாக மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் மொத்த வெங்காய உற்பத்தியில் 50 சதவீதம் உற்பத்தியாகிறது, இந்நிலையில் சமீப நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை வெறும் ரூ.1க்கு மட்டுமே  விற்பனையாகிறது. இது வெங்காய விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பல மாதங்களாக நிறைய செலவு செய்து உழைத்து விளைச்சல் ஏற்படுத்தி வெறும் ஒரு ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்பட்டால் எப்படி லாபம் பார்க்க முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாசிக் மாவட்டத்தில் வெங்காய விலை குறைந்ததாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வடக்கு மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தத்யபா ஹைனார் மற்றும் மனோஜ் ஹொண்டேஜ் ஆகியோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை குறித்து கூறிய காவலர்கள், விவசாயி தத்யபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெங்காய விலை வீழ்ச்சியே அவரின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். தத்யபா அறுவடை செய்த 500 குவிண்டாலுக்கும் அதிகமான வெங்காயம் தேக்கத்தில் இருந்ததாகவும், ரூ.11 லட்சத்துக்கும் மேல் வங்கியில் கடன் இருந்ததும்தான் தற்கொலைக்கு காரணம் என்று தத்யபாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இதேபோல் விவசாயி மனோஜும் வெங்காய விலை வீழ்ச்சி காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெங்காய விலையை உயர்த்தி, தங்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மஹாராஷ்டிரா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்