இந்தியா

ஒரே நேரத்தில் காதலி வீட்டுக்குச் சென்ற இரண்டு காதலர்கள்! சினிமாவை மிஞ்சிய கிளைமாக்ஸ்!

webteam

ஒரேநேரத்தில் முன்னாள் காதலனும், இந்நாள் காதலனும் சேர்ந்து காதலி வீட்டுக்குச் சென்றதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள அமினோர் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதலில் ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதேநேரத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசயம், முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து நிலமையை விளக்கியிருக்கிறார்.

இதனால், கோபமுற்ற அவர்கள் இருவரும், அந்தப் பெண் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் சென்று, ‘உண்மையிலேயே நீ யாரைக் காதலிக்கிறாய்’ எனக் கேட்டு மிரட்டி தாக்கியிருக்கின்றனர். இதில் பயந்துபோன அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க வெளியில் ஓடியுள்ளார். ஆனால், காதலர்கள் அந்தப் பெண்ணை விடாமல் துரத்தியுள்ளனர். இதில் மேலும் பயந்துபோன அந்தப் பெண் அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கிராம மக்கள், அந்தப் பெண்ணையும் உடனடியாக மீட்டுள்ளனர்.

முதலுதவிக்காகச் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்தப் பெண்ணின் தந்தை போர்டேஹி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய நண்பர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

- ஜெ.பிரகாஷ்