இந்தியா

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நடந்த சோகம் - மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

PT

குமளி அருகே முருக்கடியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இரும்பு ஏணி மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அட்டப்பள்ளம் லட்சம் வீடு காலனியைச் சேர்ந்தவர்கள் சிவதாஸ் மற்றும் சுபாஷ். இவர்கள் இருவரும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்திய இரும்பு ஏணியை நகர்த்தும்போது, அருகில் இருந்த மின்கம்பியில் ஏணி மோதியுள்ளது.

இதில் அவர்கள்மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தகவல் அறிந்து குமளி போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்விற்குப் பின், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.