இந்தியா

'நான் அவரில்லை..' - இந்திய கால்பந்து அணி கோல்கீபருக்கு வந்த சோதனை

கலிலுல்லா

பஞ்சாப் முன்னாள் முதல்வர் என நினைத்து இந்திய கால்பந்து அணி கோல்கீப்பரின் ட்விட்டர் கணக்கை பலரும் டேக் செய்ததற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பராக இருப்பவர் அமரிந்தர் சிங். ட்விட்டரில் Amrinder Singh என்ற பெயரில் இயங்கி வருகிறார். இவரது பெயருக்கு பக்கத்தில் ப்ளூ டிக் உள்ளது. அதேபோல பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்க்கும் ட்விட்டரில் இயங்கி வருகிறார். அவரது பெயருக்கு பக்கத்திலும் ப்ளூ டிக் உள்ளது. ஆனால் ட்விட்டரில் கேப்டன் அமரிந்தர் சிங் என்ற பெயரில் அவர் இயங்கி வருகிறார்.

இதை அறியாத பலரும் இந்திய அணியின் கோல்கீப்பரான அமரிந்தர் சிங்கின் ட்விட்டர் கணக்குக்கு டேக் செய்து கேள்வி மற்றும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கோல்கீப்பர் தனது ட்விட்டர் கணக்கில், ''அன்பான ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களே நான் இந்திய அணியின் கோல்கீப்பர் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் இல்லை. தயவு செய்து எனக்கு டேக் செய்ய வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவை கோட் செய்த முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், ''என் இளம் நண்பனே, நான் உன் நிலையைக்கண்டு பரிவு கொள்கிறேன். சிறப்பாக விளையாட வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.