மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியாக இருப்பவர், மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவரது ஆக்ரோஷமாக பேச்சு மிகவும் பிரபலம்.. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருபவர். கடந்த முறை, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். அதன் முடிவில் அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
அப்போது கர்ஜித்த அவர், ”மீண்டும் பெரிய அளவில் வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைவேன்” எனச் சபதமிட்டார். அவர் சொன்னதுபோலவே இந்த முறையும் வெற்றிபெற்று மீண்டும் எம்பியாக நுழைந்துள்ளார். அவரது, விசாரணை அப்போது பேசுபொருளானது.
இந்த நிலையில், பிஜு ஜனதா தள தலைவர் பினாகி மிஸ்ராவை, மஹுவா மொய்த்ரா வெளிநாட்டில் அமைதியான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம், கடந்த மே 3ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றுள்ளது. மஹுவா மொய்த்ராவும், பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோத்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 12, 1974 அன்று அசாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா, முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2010இல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மொய்த்ரா 2019இல் மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அதே தொகுதியிலிருந்து கடந்த ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அவர், கடந்த ஆண்டில் அதானி பற்றிய விஷயங்களை எழுப்பி விசாரணையை எதிர்கொண்டார். தவிர, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கக்கூடியவர்.
இதற்கு முன்பு டென்மார்க் நாட்டை சேர்ந்த நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மஹுவா மொய்த்ரா திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராவை அவர் மூன்று ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் பிரிந்தனர். மொய்த்ரா லஞ்சம் வாங்கிய புகாரில் அவருக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவரே ஜெய் அனந்த் தேஹாத்ராய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தின் பூரியில் அக்டோபர் 23, 1959 அன்று பிறந்த பினாகி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். மிஸ்ரா, மூத்த அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். அவர் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டமும், டெல்லி பல்கலைக்கழக சட்ட பீடத்தில் எல்.எல்.பி பட்டமும் பெற்றுள்ளார். மிஸ்ரா தனது அரசியல் பயணத்தை இந்திய தேசிய காங்கிரஸுடன் தொடங்கினார், 1996இல் பூரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2009, 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.