மேற்குவங்க மாநிலம், ஜார்க்ராம் மாவட்டத்தில் கோபிபல்லாவ்பூரைச் சேர்ந்தவர் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சத்யம் பட்நாயக். கொரோனா அறிகுறி கொண்டவரை மருத்துவனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதை அறிந்த அவர், உடனே பார்மஸிக்குச் சென்று பாதுகாப்புக் கவச உடையை வாங்கினார். அந்த உடையை அணிந்தபடி, இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபரைச் சேர்த்தது மக்களால் பெருமையுடன் பேசப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி பாராட்டுகளைக் குவித்துவருகிறது. இருசக்கர வாகனத்தில் பின்னே பயணம் செய்தவர் 43 வயதான அமல் பாரிக். புலம்பெயர் தொழிலாளரான அவர், சில நாட்களுக்கு முன்புதான் சிஜூவா கிராமத்திற்குத் திரும்பினார். அவருக்கு லேசான காய்ச்சல்.
கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்று பயந்தவருக்கு உடனே மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை. இதையறிந்த உள்ளூர் திரிணமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யம் பட்நாயக், பாதிக்கப்பட்ட நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது கொரோனா பரிசோதனை முடிவுக்காக அந்த தொழிலாளர் காத்திருக்கிறார்.