இந்தியா

பெற்றோர் சம்மதிக்க, மேளதாளம் முழங்க, கரம்பிடித்த கேரள திருநர் ஜோடி!

Sinekadhara

கேரளாவில் காதலர் தினத்தன்று பெற்றோர் சம்மதத்துடன் மேளதாளம் முழங்க திருநங்கை ஜோடி திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மணமகள் ஷியாமா கேரள சமூக நீதித்துறையின் திருநங்கைகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். திரிச்சூரைச் சேர்ந்த மணமகன் மனு ஐடி கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். காதலில் விழுந்த பிரபாவும் ஷியாமாவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். பெற்றோரிடம் அனுமதி பெற்ற அவர்கள், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019-இன் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய அரசின் அனுமதிக்காக உயர் நீதிமன்றத்தையும் நாடினர்.

காதலர் தினமான நேற்று, அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் அனைவரின் ஆசியுடன் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ’’கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்காக ஆவண வேலைகளை முடித்துவருகிறோம். அனைத்தையும் சரிசெய்த பிறகு நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் காதல் திருமணம் வெற்றிகரமாக அரங்கேற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.