இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை

rajakannan

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில் ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் கமாண்டர் உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சோபியான் மாவட்டத்தின் பான்பஜார் பகுதியில் ‌பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

அப்போது மூண்ட கடும் துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் லகோரி என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி, ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர் என்பதும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் ஐஇடி தயாரிப்பதில் கைதேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதிலும், பொதுமக்கள் பலரைக் கொல்வதிலும் ஈடுபட்டவர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.