அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த வகையில், இந்தியாவிலும் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வெளிச்சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு, கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் சமையல் எரிவாயுவைப் பெற KYC விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இண்டேன் (INDANE), ஹெச்பி (HP), பாரத் கேஸ் (BHARAT GAS) உள்ளிட்ட கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர் வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி சிலிண்டர் பெற KYC விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகள் KYC விதிகளைப் பூர்த்திசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அந்த தேதிக்குள் KYC விதிகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் அந்தப் பயனாளிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து புதிய எரிவாயு சிலிண்டரைப் பெற முடியாது என்றும், மீண்டும் அவர்கள் KYC விதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே எரிவாயு சிலிண்டரைப் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
KYC விதிகளைப் பூர்த்தி செய்ய பயனாளிகள் கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் செயலியை, உதாரணமாக இண்டேன் (INDANE), ஹெச்பி (HP) , பாரத் கேஸ் (BHARAT GAS) போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதில் மொபைல் எண், நுகர்வோர் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்யவேண்டும். பின்னர் Update E-KYC என்ற ஆப்சனுக்கு சென்று, ஆதார் எண்ணை பதிவிட்டு, பின்னர் மீண்டும் பிளே ஸ்டோருக்கு சென்று AadhaarFaceRD என்ற அரசின் அதிகாரபூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து அந்தச் செயலி மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தால் KYC பணிகள் நிறைவடைந்துவிடும். இதுதவிர ஆன்லைனில் KYC பணிகளை முடிக்க முடியாதவர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு நேரில் சென்று KYC பணிகளை முடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.