அகில இந்திய அளவில் நாளை அனைத்து மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு பல்வேறு கோரிக்கையை முன்னிறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி, போன்ற கோரிக்கைகளுடன் அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நாளை போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையம் சென்றடைந்தனர். அப்போது விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் முழக்கமிட்டு ராம்லீலா மைதானம் வரை நடந்து சென்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தல், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து அதன்மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுத்தல், புயல் சேதத்தால் அழிந்துவிட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைந்து அளித்தல், கரும்பு நிலுவைத்தொகை வழங்குதல், 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் 5,000/- வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக டெல்லி சென்ற தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையம் முதல் ராம்லீலா மைதானம் வரை அரை நிர்வாணத்துடன் சென்றனர். மண்டைஓடு, எழும்புகளுடன் அவர்கள் ஊர்வலம் போல சென்றனர். அப்போது மந்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட படியே நடந்துச் சென்றனர்.