தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அடுத்தடுத்து பல மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடாவான சுகேந்து சேகர் ராய், தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகியிருப்பது மம்தாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசலும் வெடித்து வருகிறது. மம்தாவுக்கு எதிராக பல எம்எல்ஏக்களும் எம்பிக்களுமே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார்.
இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களில் பலர், அக்கட்சியின் அதிருப்தியில் உள்ள பராசத் எம்பியான ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் பிரிந்து செல்லக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடாவான சுகேந்து சேகர் ராய், தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகியதைத் தொடர்ந்து மம்தாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அவர் மம்தாவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை எழுதியுள்ளார். அதேநேரத்தில், அவர் பாஜக அரசைப் பாராட்டியும் உள்ளார். தற்போது வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 23 எம்பிக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதில் 14 பேர் மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியைப் போய்ச் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்திருக்கும் நிலையில், சுகேந்து சேகர் ராயின் பதவி விலகலால் மக்களவையும் இரண்டாக உடையும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிந்து செல்லும் குழு ஒன்றை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை மக்களவை எம்பிக்களின் ஒரு பிரிவு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், 12-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஏற்கெனவே அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உருவாகி வரும் இந்த அதிருப்திக் குழுவிற்கு ஒரு மூத்த எம்.பி. தலைமை தாங்குவதாகக் கூறப்படுகிறது.