ஆனந்த் மஹிந்திரா Pt web
இந்தியா

“1 வாக்கில் மாறிய வெற்றி; ஒவ்வொரு பள்ளியிலும் காட்டவேண்டும்” - ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், திருப்பத்தூர் தொகுதியின் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சியுடன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

Premkumar S

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-அதிமுக ஆதிக்கத்தை உடைத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருப்பத்தூர் தொகுதியில் 1.66 லட்சம் வாக்குகளில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பனை வீழ்த்திய சம்பவம் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் வலிமையை உலகுக்கு நினைவூட்டியது.

பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள தேர்தலாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இருக்கிறது. 1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல, முதல் தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதத்தை பெற்றக் கட்சியாக எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 33.5 சதவீதத்துடன் இருந்து வந்த சூழலில், விஜயின் தவெக சுமார் 35 விழுக்காட்டுடன் அதை முறியடித்திருக்கிறது.

விஜய்

கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். தொடர்ந்து, வாக்குக்கு பணம் மற்றும் குறிப்பிட்ட தொகுதியில் பெரும்பான்மை சாதி பார்த்து வேட்பாளர் நிறுத்துவது ஆகியவற்றை தமிழக வெற்றிக் கழகம் முறியடித்திருக்கிறது. அதிகப்படியான இளைஞர்கள் சட்டமன்றம் செல்லவிருக்கின்றனர். இந்தசூழலில் தான், திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக பார்க்கப்படுகிறது.

1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி!

திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் 83,364 வாக்குகளை பெற்றநிலையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வெற்றியை தன்பக்கம் மாற்றினார். அதுவரை 107 தொகுதிகளில் மட்டுமே தவெக வெல்லும் நிலை இருந்தநிலையில், 1 வாக்கில் வென்று தவெகவின் வெற்றி எண்ணிக்கையை 108ஆக சீனிவாச சேதுபதி மாற்றினார்.

விஜய், சீனிவாச சேதுபதி

இத்தேர்தலில் 1,000 ஓட்டுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பலரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து “ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை உணத்துவதாக” தெரிவித்து வந்தனர்.

அந்தவகையில் தான், திருப்பத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததுடன், ”பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களைத் தந்தாலும், இந்தப் புகைப்படம் தான் எனது நினைவில் நீங்காமல் நிற்கும். 1.66 லட்சம் வாக்குகள் பதிவாகியும், வெறும் ஒரே ஒரு வாக்கால் வரலாறு மாறியுள்ளது. 'தனி ஒருவரின் வாக்கு' எவ்வளவு வலிமையானது என்பதை உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் இந்த ஒரு புகைப்படத்தைக் காண்பித்து குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கிற்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதற்கு இந்தத் திருப்பத்தூர் தேர்தல் முடிவு ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.