இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயில் 6 மாதங்களுக்கு மூடப்படுகிறதா? - தேவஸ்தானம் விளக்கம்

webteam

ஏழுமலையான் கோயில் ஆறு மாதங்களுக்கு மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம்  தெரிவித்துள்ளது.  
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் சுமார் ஆறு மாதக் காலம் நடைபெறும் என்று தேவஸ்தானம் கூறுகிறது. புதிய தங்கத் தகடுகள் பொருத்தப்படும் ஆறு மாத காலமும் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால தீட்சதுலு, பொன்முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்படும் சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்.

இதற்கு முன்னர் 1957- 58 ல் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எனவே அந்த சமயத்தில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். அதே நேரத்தில் பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவரையும் வழிபடலாம். ஆனால் மூலவருக்கு நடத்தப்படும் கட்டண சேவைகள் அனைத்தும்
ஏகாந்தமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சவருக்கு நடத்தப்படும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவை உள்ளிட்ட கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது