பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு, கடந்த மாதம் மர்ம நபர் ஒருவரிடமிருந்து இ-மெயிலில் மிரட்டல் வந்தது. அதில், 500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், தராதபட்சத்தில் பயங்கர பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பெல்லந்துார் போலீசார் விசாரணை நடந்தி வந்த நிலையில், நிறுவனத்தின் சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இ-மெயில் மூலம் விப்ரோ நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில், 72 மணி நேரத்தில், 500 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்கள் அலுவலகத்தில் பயங்கரவாத சம்பவம் அரங்கேறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் அல்லது தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு மிரட்டல்களும் ஒரே இ-மெயில் ஐடியிலிருந்து வந்திருப்பதாகவும், சுவிட்சர்லாந்தின் ஐ.பி. அட்ரஸிலிருந்து இந்த மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.