இந்தியா

அன்று சரத் பவார்; இன்று அஜித் பவார் - வரலாறு சொல்லும் 'பவார்' கதை!

அன்று சரத் பவார்; இன்று அஜித் பவார் - வரலாறு சொல்லும் 'பவார்' கதை!

webteam

மகாராஷ்ட்ராவில் ஜனநாயக கேலி கூத்து நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில்,‌ அம்மாநிலத்தில் இதுபோன்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பது இது முதல் முறையல்ல. 1978 ஆம் ஆண்டு சரத் பவார் அறிமுகப்படுத்திய வியூகத்தைத்தான் அவரது உறவினரான அஜித் பவார் தற்போது பின்பற்றியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி மகாராஷ்ட்ராவில் தற்போதுள்ள அரசியல் திருப்பங்கள் அனைவருக்கும்‌ ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளன.‌ ஆனால், அப்படியே 40 ஆண்டுகளுக்கு முன்னோக்கி சென்று‌ பார்த்தால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றும். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலின்போது,‌ காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்து போட்டியிட்டது.

இந்திரா காந்தியின் காங்கிரஸ் க‌ட்சி 62 இடங்களிலும், சரத் பவார் இடம்பெற்றிருந்த தேவராஜ் அர்ஸ் காங்கிரஸ் கட்சி 69 இடங்களிலும் வெற்றி பெற்றது. பிரதான‌ கட்சியான ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

தற்போதைய தேர்‌தலில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையின்றி ஆட்சி அமைக்க முடியாமல் இருந்த பாஜக-வைப் போலத்தான், 1978 ஆம் ஆண்டு 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத சூழலில் ஜனதா கட்சி இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது அஜித் பவாரைப் போலவே அப்போது சரத் பவார் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தார். 

இன்றைய ‌அரசியல் சூழலில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் சரத் பவாரோ, அப்போது முதலமைச்சராகவே பதவியேற்றார். 'தேவராஜ் அர்ஸ் காங்கிரஸ்' கட்சியிலிருந்து 40 ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் பிரிந்த சரத்‌பவார், ஜனதா கட்சி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். 

அந்த கூட்டணி ஆட்சிக்கு முற்போக்கு ஜனநாயக முன்னணி ஆட்சி என பெயர். அதன்பிறகு 1980‌ ஆம் ஆண்டு மத்தியில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததையடுத்து, மகாராஷ்ட்ராவில் சரத்பவாரின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதைய அரசியல் சூழலை சுட்டிக்காட்டித்தான் அஜித் பவாரின் முடிவை விமர்சிக்க சரத் பவாருக்கு தகுதியில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.