புதுச்சேரி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது. இந்த சூழலில், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகே, தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை உடன்பாட்டை எட்டியிருக்கிறது. அதன்படி, காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 12 தொகுதிகளும், விசிக மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், விசிக கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டுவந்த நிலையில், ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதற்கிடையில் தான், 1 தொகுதிகளில் மட்டுமே விசிக ஒதுக்கப்பட்டது அக்கட்சினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டிடும் எனத் தெரிவித்து அக்கட்சின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமார் 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்றோம்.
தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிக'வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்த போதிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் கூட அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. விசிக'வுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில் எமது கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வரும் விசிக கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டுருந்தது. ஆனாலும், திமுக சார்பில் 8 இடங்கள் மட்டுமே தர முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று திமுக விசிக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் நிலையில், புதுச்சேரியில் தனித்துப் போட்டிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.