ஒப்படைக்கப்பட்ட கோயில் நகைகள்
ஒப்படைக்கப்பட்ட கோயில் நகைகள் @odisha tv
இந்தியா

‘ரூ.100 அபராதம், ரூ.201 நன்கொடையா வச்சுக்கங்க’ -கடிதத்துடன் திருடிய கோயில் நகைகளை ஒப்படைத்த திருடன்

சங்கீதா

பொதுவாக எப்போதாவது அதிசயதக்க விஷயங்கள் நடக்கும்போது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறநகர் பகுதியான கோபிநாத்பூரில் உள்ள கோயிலில் இருந்து மதிப்புமிக்க வெள்ளி ஆபரணங்களை திருடிய நபர் ஒருவர், மன்னிப்பு கடிதத்துடன் நகைகளை ஒப்படைத்து சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்கோயிலில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் கிருஷ்ணா-ராதையின் வெள்ளி நகைகள் திருடு போயுள்ளது. நகைகள் திருடு போயிருந்ததை அடுத்து, புகாரின் பேரில் லிங்கராஜ் காவல்நிலைய போலீசார், கிராம மக்கள் மற்றும் யாகம் நடத்த வந்த பூசாரிகள் உள்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

ஆனால், இந்த விசாரணையில் திருடுப்போன நகைகள் குறித்து எதுவும் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. இதனால் திருடுப்போன நகைகள் கிடைக்காது என்று கோயில் பூசாரிகள் மற்றும் அக்கிராம மக்கள் அதனை மறந்துவிட்ட நிலையில், தற்போது ஒன்பது வருடங்களுக்குப் பிறகு காணாமல் போன கோயில் வெள்ளி நகைகள் கிடைத்துள்ளது. இதில், ஆச்சரியம் என்னவெனில், கோயில் நகைகளை திருடிய நபர், கோயிலை ஒட்டிய தேபேஷ் குமார் மொஹன்ட்டி என்பரின் வீட்டின் வெளியே மன்னிப்பு கடிதம், நன்கொடையாக ரூ. 301 மற்றும் 4 லட்சம் ரூபாய் மிதிப்பிலான திருடிய வெள்ளி நகைகள் அடங்கிய பேக் (bag) ஒன்றை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அந்த மன்னிப்பு கடிதத்தில், ‘கோயிலில் யாகம் நடந்துக்கொண்டிருந்தபோது, கோயில் நகைகளை திருடினேன். நகைகள் திருடியதிலிருந்து இந்த ஒன்பது ஆண்டுகளில் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். அதனால், கடவுள் முன்னர் சரணடைந்து திருடிய நகைகளை ஒப்படைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். எனது பெயர், முகவரி, கிராமம் எதனையும் நான் இதில் குறிப்பிடவில்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருடிய குற்றத்திற்காக ரூ. 100 அபராதமும், ரூ. 201 நன்கொடையும் விட்டுச் செல்கிறேன் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா, ராதையின் தலைக் கிரீடங்கள், காதணிகள், வங்கிகள் மற்றும் ஒரு புல்லாங்குழல் என ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் விட்டுசென்றுள்ளார் திருடிய நபர்.

Priest

நகைகள் திரும்ப கிடைத்தது குறித்து கோயில் பூசாரி கைலாஷ் பாண்டா தெரிவித்துள்ளதாவது, “காவல்துறையினர் திருடப்பட்ட நகைகளை மீட்காத நிலையில், அனைத்து நம்பிக்கைகளையும் இத்தனை வருடங்களாக கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன்பிறகு கடும் சிரமங்களுக்கு மத்தியில், புதிய ஆபரணங்களை நாங்கள் வாங்கினோம். கடவுள், திருடனை தண்டித்துவிட்டதால், அவரே நகைகளை கொண்டுவந்து திரும்ப ஒப்படைத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.