மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வென்றதை விட, இம்முறை இரு கட்சிகளுமே குறைவான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. அதே சமயம் பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு பாரதிய ஜனதா, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. எனினும் பாரதிய ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, இம்முறை முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக தெரிவித்து வருகிறது.
குறிப்பாக சுழற்சி முறையில், இரு கட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனா முன் வைத்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா ஒப்புதல் தெரிவிக்காததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், தங்களுக்கு 15 சுயேச்சைகள் ஆதரவு இருப்பதால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்த முரண்பாடும் எழாது என பாரதிய ஜனதா நம்பிக்கை தெரிவித்துள்ளது.