இந்தியா

“வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது”- மத்திய சுகாதாரத்துறை

webteam

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன் தங்கள் வீடுகளிலேயே முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரிக்கப்படவேண்டும் எனக் கூறினார்.

இது குறித்து அவர் கூறும்போது, “பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். பல இடங்களில் மக்கள் அச்சத்தால் மருத்துவமனை படுக்கைகளை ஆக்ரமித்து இருக்கின்றனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படியே மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படவேண்டும். போதிய மருத்துவ ஆக்சிஜன் இருக்கிறது.

அதை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலேயே சவால் பணி சவாலாக உள்ளது. சமூக இடைவெளி பின்பற்றப்படாவிட்டால் கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு தொற்று பரவுவுகிறது. சமூக இடைவெளி 50 சதவிகிதம் பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து 15 பேருக்கு மட்டுமே தொற்று பரவும். 75 சதவிகிதம் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து 2.5 பேருக்கு மட்டுமே தொற்று பரவும்” என்று அவர் கூறினார்.