இந்தியா

அக்கா கணவருக்கு மறுமணம் செய்துவைக்க முயன்ற தங்கை.. கோபத்தில் தங்கைக்கு வில்லியான அக்கா!

webteam

மேற்கு வங்கத்தில் தன் உடன்பிறந்த சகோதரி மீதே பெண்ணொருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மாம்ராஜ்பூர் பகுதியை அடுத்த பிர்சிங் கிராமத்தைச் சேர்ந்த அகாலிமா பீபியும் ரஹீமா பீபியும் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த அஷதுல் அலி மற்றும் டெஸ்லிம் அலி ஆகிய சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதில், அக்கா அகாலிமாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைக் காரணம் காட்டி அகாலிமா கணவர் டெஸ்லிம் அலிக்கு வேறொரு பெண்ணை மணம் முடிக்க தங்கை ரஹீமா யோசனை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதற்காக, ரஹீமா பெண் பார்க்கும் படலத்திலும் இறங்கியதாகத் தெரிகிறது.

இந்த விஷயம் தெரிந்த அகாலிமா, தன் சகோதரியான ரஹீமாவிடம் போய்க் கேட்டுள்ளார். அப்போது, ‘என் கணவருக்கு வேறொரு பெண்ணை பார்க்கும் முயற்சியில் நீ ஈடுபட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன்’ என அகாலிமா எச்சரித்துவிட்டு வந்துள்ளார். இதற்கிடையே ரஹீமா, மீண்டும் பெண் பார்க்கும் படலத்தில் இறங்க, சகோதரிகள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது வீட்டினுள் சென்ற அகாலிமா, ஆசிட்டை எடுத்துவந்து ரஹீமா முகத்தில் ஊற்றியுள்ளார்.

எரிச்சல் தாங்க முடியாமல் துடிதுடித்த ரஹீமாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அகாலிமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அகாலிமாவின் கணவர், காப்பர் தொடர்பான தொழில் செய்து வருவதால் அதற்காக ஆசிட் வாங்கி வைத்திருந்ததாகவும் அதை எடுத்து தன் சகோதரியின் முகத்தில் அகாலிமா வீசியதாகவும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்