இந்தியா

கேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை

கேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை

webteam

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் நடுரோட்டில் பெண் காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா. இவர் வழக்கம்போல பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடந்து வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. கீழே விழுந்த சவுமியாவை, காரில் இருந்து இறங்கிய இளைஞர் அரிவாளால் வெட்டினார். மேலும், கேனில் எடுத்து வந்த பெட்ரோலை சவுமியா மீது ஊற்றி தீ வைத்தாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்தனர். அதேசமயம் தீயில் கருகிய சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆலுவா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் அஜாஸ் என்பது தெரியவந்தது. அஜாஸூக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.