இந்தியா

யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரமாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர்!

webteam

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் யானைகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத் துறையினரின் கண்ணுக்கு காட்டு யானை ஒன்று தெரிய வரவே அந்த யானையை வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், வனத் துறையினருக்கே தண்ணீர் காட்டும் வகையில் காட்டு யானை அவர்களை துரத்தியது.

இதனால் உயிருக்கு அஞ்சி அந்த ஊழியர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரிதவித்தனர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்த பின்னரே வனத் துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேற முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.