டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அந்நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் டிக்டாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை வரும் 15 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.