குமாரபாளையம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் குள்ளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ளது தோப்புக்காடு. இப்பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்ற விசைத்தறி தொழிலாளியின் வீட்டில் நள்ளிரவு பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் எழுந்து திறந்திருந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக இருவரையும் மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள் அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குமாரபாளையம் போலீசார், அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பதாகவும், அவர்கள் பெயர் சரவணன் மற்றும் கணேசன் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த உடைக்கப்பட்ட இரண்டு பூட்டுகள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள் மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் குமாரபாளையத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.