இந்தியா

"விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக ஆட்சியாளர்கள்தான் தேசத்துரோகிகள்"-சீமான்

"விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக ஆட்சியாளர்கள்தான் தேசத்துரோகிகள்"-சீமான்

Veeramani

விவசாயிகளின் வாகனப் பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி,  நாட்டைத் தலைகுனியச் செய்து விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் வாகனப்பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களாட்சி நாடாகப் பேரறிவிப்புச் செய்யப்பட்ட இந்நாளில், மக்கள் மீதே அரச வன்முறையையும், கொடுந்தாக்குதலையும் நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது.

விவசாய நாடு என அண்ணல் காந்தியடிகளால் கொண்டாடப்பட்ட இந்நாட்டில், குடியரசு தினம் நாடெங்கும் நினைவுகூறப்படுகிற இவ்வேளையில் விவசாயப் பெருங்குடிகள் மீது ஏவப்படும் அரசப்பயங்கரவாதத்தின் மூலம் சர்வதேசச் சமூகத்தின் முன்பு இந்தியா, அவமானத்தின் சின்னமாய் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

சொந்த நாட்டின் குடிகளையே துளியும் மதித்திடாதப் போக்கின் மூலம் நாட்டைத் தலைகுனியச் செய்து விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்” என தெரிவித்திருக்கிறார்