இந்தியா

பேச்சுவார்த்தை தோல்வி... 41வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!

webteam

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 41 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இன்று 41ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசுடன் நடந்த 7ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர். ஆனால் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரலாம் சட்டங்களை வாபஸ் பெற இயலாது என அரசும் உறுதியாக கூறிவிட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து வரும் 8 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் முனைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு டிராக்டர் மூலம் பேரணியாக செல்லப்போவதாகவும், வரும் 13 ஆம் தேதி போகிப் பண்டிகையன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடப் போவதாகவும் விவசாய அமைப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.