காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. கடந்த 3ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14ஆம் தேதி, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தினால், நாளை நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.