இந்தியா

கேரளா: இளம் பெண்ணை கடித்துக் குதறிய நாய்கள் - உரிமையாளர் கைது

JustinDurai
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இளம் பெண்ணை சூழ்ந்து மூன்று நாய்கள் கடித்து குதறியதால் அவற்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு அருகே தாமரசேரியில் ஒரு வீட்டில் பவுசியா என்ற இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல பணி முடிந்ததும், அந்த வீட்டின் வாசலுக்கு வந்து பேருந்துக்காக அவர் நின்றபோது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் பவுசியாவை சூழ்ந்து கொண்டு குரைத்தபடி இருந்தன. இதனால், அங்கிருந்து நகராமல் அச்சத்துடன் வெறும் கைகளை காட்டி நாய்களை விரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சாலையை கடக்க அவர் முயன்றபோது, பாய்ந்து வந்த நாய்கள், பவுசியாவை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. அவரது அலறல் சத்தம் கேட்டு, நாயின் உரிமையாளர் ஓடோடி வந்து, பவுசியாவை காப்பாற்ற முயன்றார்.
ஆனாலும், அந்த நாய்கள் அவரை விடாமல் தொடர்ந்து கடித்து குதறிக் கொண்டிருந்தன. அங்கிருந்த பொதுமக்களும் நாய்களை விரட்ட மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இறுதியாக அருகில் இருந்த கம்பு மற்றும் கற்களை வீசி தாக்கி, நாய்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் ரோஷன் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு இன நாய்களை கவனக்குறைவாக வளர்த்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.