இந்தியா

கொரோனா காலத்தில் உயர்ந்த குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை - மத்திய புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?

JustinDurai
கொரோனா காலத்தில் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை பணி அமர்த்துவது சட்டப்படி குற்றம். ஆனால் கொரோனா பெருந்தொற்று காலம் நாட்டில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. மக்களவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 -2018 ஆம் நிதிஆண்டில் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 635 ஆக இருந்தது என்றும், 2019 -2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 894ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கொரோனா பெருந்தொற்று காலமான 2020- 2021 ஆம் ஆண்டில் 58 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. 2019-2020ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 928 ஆக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 2020-21 ஆண்டில் ஆயிரத்து 456ஆக குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில 29 ஆயிரத்து 179 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பீகார், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைத் தொழிலாளர்களே மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.