இந்தியா

நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு விவகாரம்... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் ஒன்றாக இணைத்து டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான கண்டனங்களும் போராட்டங்களும் எழுந்தது. தொடர்ந்து நுபுர் சர்மா மீது பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது, எந்த மதத்தினரையும் இழிவு படுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது என்று பாஜகவின் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நுபுர் சர்மாவின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவையில்லாத கருத்துகளை தெரிவித்து நுபுர் சர்மா நாட்டை தீக்கிரையாக்கி விட்டார் எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில், முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகிய எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து டெல்லி காவல்துறைக்கு மாற்றியமைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.