இந்தியா

பருவமழை பொழிவு குறைவு : பொருளாதாரம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு

webteam

பருவமழை பொழிவு வழக்கத்தைவிட குறைந்திருப்பதால்,நாட்டின் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான அளவே மழை பொழிந்துள்ளது. பருவமழை தொடங்கி நான்கு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் மழைப்பொழிவு தீவிரமடையாவிட்டால், நாட்டின் நிலைமை மோசமடையும் என கூறப்படுகிறது.

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 24 சதவீதத்துக்கும் குறைவான மழையே கடந்த 26ம் தேதி வரை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சோயா உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் மத்தியப் பிரதேசத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யாத காரணத்தினால்,அங்கு வேளாண் தொழி்லில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, சோயா, மக்காச்சோளம் போன்ற கோடை கால பயிர் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பயிரிடப்பட்ட கோடை கால பயிர்களை விட, இந்த ஆண்டு 12.5 சதவீத அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக வேளாண் அமைச்சகமும் கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே போதிய மழை இல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற தென் மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களிலும் வறட்சி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் எதிர்வரும் காலங்களில் மழை கைகொடுக்காவிட்டால், நாட்டின் பொருளாதாரமும் பெரிய அளவுக்கு வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைய வாய்ப்பு அதிகம் என கவலை தெரிவிக்கின்றனர்.