இந்தியா

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி

webteam

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக, துணைநிலை ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, உத்தரவுகள் பிறப்பிப்பது என வரம்பு மீறிய செயல்பாடுகளில் ஈடுபடுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு சமம்" என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, துணைநிலை ஆளுநரின் சார்பில் அவரது தனிச்செயலாளர் ஸ்ரீதரன் தாக்கல் செய்த பதில் மனுவில்,"துணை நிலை ஆளுநருக்கு என பிரத்யேக அதிகாரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியே துணை நிலை ஆளுநர் தான் எனவும் கூறப்பட்டது. மேலும், நிர்வாக ரீதியாக துணைநிலை ஆளுநர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் குற்றம் காண முடியாது என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், எம்.எல்.ஏ.லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி,"அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணைநிலை ஆளுநர் தலையிட முடியும் எனவும், மாறாக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது" என வாதிட்டார். மேலும், ஒவ்வொரு விஷயத்துக்கும், அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் மீறி, துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை" என ப.சிதம்பரம் வாதிட்டார். இதனையடுத்து  இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இவ்வழக்கிற்கு நீதிபதி மகாதேவன் இன்று தீர்ப்பளித்தார். அதில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.