கேரளா விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பிரஷர் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் பிடிபட்டது!
கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சவுதி அரேபியாவில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சோதித்தனர். அவர் பிரஷர் குக்கர் ஒன்று கொண்டு வந்திருந்தார். அதை திறந்து பார்க்கையில் ஒன்றும் இல்லை. ஆனால் அடிப்பாகம் போலியாக இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.
அதன் கீழ்புறம் பெரிய இடைவெளி இருந்தது தெரியவந்தது. உடனே அந்தப் பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனையை தீவிரமாக்கினர். அப்போது குக்கரின் அடிப்பாகம் போன்று வைக்கப்பட்டிருந்த தகட்டை அகற்றினர். அதில் தங்கக் கட்டி ஒன்று இருந்துள்ளது. உடனே சம்பந்தப்பட்ட பயணியை கைது செய்தனர்.
அந்த தங்கம் 700 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.36 லட்சம் என்று தெரியவந்தது. தொடர்ந்து பயணியிடம் விசாரிக்கையில், அவர் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த டி.ஹம்சா என்றும், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து விமான புலனாய்வு துறை பி பேட்ச் அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.