cockroach janta party CJP Beat BJP
இந்தியா

இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி.. 4 நாளில் சாதித்த CJP.. பாஜகவை முந்தியது எப்படி?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தால் உருவான ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் எப்படி ஒரு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

கடந்த மே 15-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் போலிச் சான்றிதழ்கள் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "வேலையில்லாமல், எந்தத் தொழிலும் செய்யத் தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப்போல ஒட்டுண்ணிகளைப்போல சமூக வலைத்தளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

இது சர்ச்சையானதும், "நான் போலிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன், ஒட்டுமொத்த இளைஞர்களை அல்ல" என அவர் கூறியிருந்தார். நீதிபதியின் கருத்து சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்ற 30 வயது இளைஞர் மே 17-ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராமில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற பக்கத்தைத் தொடங்கினார்.

அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கி வெறும் 4 நாளில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விஞ்சியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் 8.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே அதிக பின்தொடருபவர்களைக் கொண்ட அரசியல் கட்சியாக பாஜக இருந்தது. ஆனால், இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி' 4 நாளில் அதனை விஞ்சி, தற்போது 9.5 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது.

இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதவி ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கு உடனடியாக ராஜ்யசபா எம்பி பதவியோ அல்லது வேறு அரசுப் பதவிகளோ வழங்கக் கூடாது, வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர்களைக் காரணமின்றி நீக்கினால், தலைமை தேர்தல் ஆணையர் மீது கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (UAPA) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு கட்சியில் வென்றுவிட்டு, பணத்திற்காகவோ, பதவிக்காகவோ வேறொரு கட்சிக்குத் தாவும் எம்.எல்.ஏ/எம்.பி-க்கள் தேர்தலில் போட்டியிட 20 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும், நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்காமல், இருக்கும் இடங்களிலேயே பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

cockroach janta party

இந்த காக்ரோச் ஜனதா கட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கிய அபிஜீத் திப்கே ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக நிர்வாகியாக முன்னர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.