இந்தியா

”எங்கள் வாதங்களை முழுசா கேட்கல” - 6 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு

webteam

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன் சிறை நன்னடத்தை, சிறையில் இருந்தபடி கல்வி கற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டியும், ஆளுநர் அவரது விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை முடிவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்ததையும் சுட்டிக்காட்டியும், உச்ச நீதிமன்றத்தால் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதை அடிப்படையாகக் கொண்டு சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் 6 பேரும் நவம்பர் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது. சிறையில் இருந்து வெளி வந்ததற்கு பிறகு நளினி செய்தியாளர்களை சந்தித்தது உள்ளிட்டவையும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே முந்தைய தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவின் மத்திய அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு சொலிஸ்ட்டர் ஜெனரல், கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.