பெற்றோரின் பிரச்னையை தீர்த்து வைத்த உச்சநீதிமன்றத்திற்கு 10 வயது சிறுவன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளான்.
10வயது சிறுவன் நீதிமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடவுள் எப்போதும் உங்களுக்காக ஏதேனும் ஒன்றை வைத்திருப்பார்.எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும். எல்லா நிழலுக்கும் ஒரு வெளிச்சம் இருக்கும். எல்லா துயருக்கும் ஒரு தீர்வு இருக்கும் மற்றும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திட்டம் இருக்கும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சிறுவனின் பெற்றோர்கள் 1997 ஆம் ஆண்டு மே மாதத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தம்பதியினர் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். நீதிமன்றத்தை நாடிய இவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக சிவில் மற்றும் குற்றவியல் மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர் இவர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். விவாகரத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் பின்னணியை கருத்தில் கொண்டும், இருவரும் நீண்ட காலமாக பிரிந்து இருப்பதால் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பெற்றோரின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு வழங்கிய நீதிமன்றத்திற்கு தான் சிறுவன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளான்.